செவ்வாய், 23 அக்டோபர், 2012

மர்ஹும் டிராயிங் மாஸ்டர் அப்துல்ரகுமான் சார் அவர்கள்


முஸ்லிம்மேல்நிலைப்பள்ளியின் மரியாதைக்குரிய ஆசான்கள்
              மேலப்பாளையம் முஸ்லிம்மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் என்றும் மரியாதைக்குரியயவர்கள். பல்லாயிரக் கணக்கான மாணவச் செல்வங்களை பவளமுத்துக்களாக விலை மதிக்க முடியாத வைரகற்களாக கூர்படுத்தியவர்கள். மாணவர்களை செவ்வனே தயார் செய்து உலக நாடுகளில் சுற்றி சுழன்று பணி செய்யும் நல்ல பண்பாளர்களை,கல்வியாளர்களை சமுதாயத்திற்கு தந்த அந்த சாதனையாளர்களின் பெருமைகளை நாம் என்றும் நினைத்து பெருமை படவேண்டும். முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முஸ்லிம்களால் நடத்தபட்டாலும் பாகுபாடு இல்லாமல் அனைத்து மத ஆசிரியர்களை சரிசமமாக பணியில் அமர்த்தி சமுகத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கும் சிறந்த நிர்வாகம் ஆகும்.
டிராயிங் மாஸ்டர் அப்துல்ரகுமான் சார் அவர்கள்
              டிராயிங் மாஸ்டர் என்று அன்போடு அழைக்ககூடிய மரியாதைக்குரிய அப்துல் ரகுமான் சார் அவர்கள் மீது மாணவர்களிடத்தில் ஒரு பெரும் மரியாதை உண்டு. அவர்களின் நடை, அணிந்து இருக்கும் கண்ணாடியின் நேர்த்தி, அவர்களின் மிடுக்கு என்றும் நம் மனதில் நிற்கும். அவர்கள் வருகிறார்கள் என்றால் அந்த இடமே நிசப்தமாக ஒழுக்கமாக மரியாதைகள் ஓங்கி முகத்தில் ஒருவிதமான பயத்தோடு காட்சி தருவார்கள். அப்போதே பேண்ட்,ஷர்ட் இன் செய்து ஸ்டைலா தான் இருக்கும் அவர்களின் தோற்றம்.அவர்கள் பக்கத்தில் சென்றாலே பிஸ்கட் பவுடர் வாசம் அற்புதமாக அவர்களின் மீது இன்னும் மரியாதையை கூட்டும் முகமாக இருக்கும்.  
               ராஜ்தூத் என்ற இருசக்கர மோட்டார் பைக்கில் தான் வருவார்கள்  அதன் பிறகு சுசுகி பைக்கில் வந்தார்கள்.கொள்ளபேர் தினமும் அதை அருகில் சென்று பார்த்து செல்வார்கள்.காரணம் அப்போது தான் ஷோ ரூம்பில் இருந்து வந்ததுபோல எப்போது பார்த்தாலும் பளபள வென்று இருக்கும். நான் உட்பட பலர் அவர்கள் செல்லும் அழகை நின்று பார்த்து,ரசித்து செல்வோம். இன்னும் சொல்லப்போனால் அந்த இரண்டு வகை பைக்குகளும் மாணவர்கள் அப்போது தான் பார்த்து இருப்பார்கள். மாணவர்களிடத்தில் சுத்தம், அப்போதே மூடநம்பிக்கையை எதிர்த்து பேசுவார்கள் மற்றும் சுகாதாரத்தை அதிகமாக எடுத்து சொல்லுவார்கள்.
               ஆறாவது வகுப்பு முதல் பன்னிரெண்டாவது வகுப்பு வரை வகுப்பு எடுப்பார்கள் வாரத்தில் ஒரு வகுப்பிற்கு இரண்டுமுறை தான் பிரியடு இருக்கும். அந்த இரண்டு பிரியடும் வகுப்பறை நீட்டாகயும்,மாணவ,மாணவிகள் அமைதியாகயும் இருப்பார்கள்.
             பழைய கட்டிடத்தில் ஒரு வகுப்பறைக்கும் இன்னொன்றுக்கும் இடையே அரைவாசி சுவர்மட்டும் தான் இருக்கும். ஆறாவது பிரிவு அ முதல் ஈ வரை ஒரு வகுப்பறையில் மாணவர்கள் பேசும் பேச்சுக்கள் சத்தம் அனைத்தும் கேட்கும்.
             பக்கத்து வகுப்புக்கு சார் வரவில்லை என்றால் மாணவர்கள் சத்தம் தாங்க முடியாது அந்த அளவிற்கு சந்தைகடைபோல இருக்கும். பக்கத்து வகுப்பில் சார்பிரியடு என்று தெரிந்தாலே மயான அமைதி ஏற்படும். அந்த பிரிவின் வகுப்புத் தலைவன் கட்டுகோப்பாக வைத்து இருக்க பெரும் பாடுபடுவான்.அதையும் மீறி சேட்டை செய்யும் மாணவர்களை கையில் பெரிய சாட்டை கம்போடு அழைத்துவருவான். அவர்களை சார் அவர்கள் எச்சரித்து அனுப்புவார்கள்.
மீராபள்ளிவாசல் கொடிக் களை
                                 சார்வாள் அவர்களின் நகைச்சுவை பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம் அவர்கள் பேசஆரம்பித்து விட்டால் வகுப்பறை சிரிப்பு சத்தமாக தான் இருக்கும் அதைவிட அந்த நகைச்சுவை அறியுரையை புகட்டுவதுதாக இருக்கும். ஆறாவது வகுப்பில் மாணவர்களின் உயரம் குள்ளமாக தான் இருப்பார்கள்.அதைவிட சில மாணவர்கள் சற்று உயரமாக இருப்பார்கள். அவர்கள் எதாவது சேட்டை பண்ணினால் மீராபள்ளிவாசல் கொடிகளை என்று சொல்லி அழைப்பார்கள்.அதேபோல சிலமாணவர்களின் குரல் முரட்டு தனமாக இருக்கும்.அமைதியான சூழ்நிலையில் அவர்கள் பேச்சி துல்லியமாக கேட்கும் அதற்க்கு சார் அவர்கள் யார்லே பெரியமனிதன் குரலில் பேசுவது என்றும், சாரை கண்டு பாவலாகட்டும் (நல்லபையன்போலநடிப்பது) பையன்களை வலாபா என்று அழைப்பார்கள்.
அன்பும் அரவணைப்பும்
                 ஏழை, எளிய மாணவர்களிடம் அன்போடுஅரவணைத்து செல்வார்கள். எல்லா மாணவர்களிடமும் பாகுபாடு இல்லாமல் சரிசமமாக பாவித்து செல்வார்கள்.இன்று ஒருபடத்தை வரைய வேண்டும் என்று நினைக்கும் போதே அவர்களின் நினைவுகள் வந்துவிடும்.ஆறாவது வகுப்பில் ஒரு அடி ஸ்கேல் அறிமுக படுத்தி அதில் உள்ள அளவுகளையும் அதை எப்படி பயன்படுத்துவது ஒரு காட்சியை எப்படி வரைய வேண்டும். நோட்டில் மத்திகோடு போடுவது முதல் வரையும் வரை அனைத்தையும் நுட்பமாக கற்றுதந்தவர்கள். அளவுக்கு ஒரு நோட்பேப்பர் பயன்படுத்தி பல ஓவியங்களை மக்கு பையன்களும் படம் வரையும் திறமையை வளர்த்து விடுவார்கள்.வரைந்த படத்தை சுற்றி கருப்பு சிகப்பு பார்டர் போட்டு, நோட் நீட்டாக இருந்தால் மாணவர்கள் அணிந்து இருக்கும் ஆடைகள் நீட்டாக இருந்தாலும் மார்க் கொஞ்சம் அதிகமாக போடுவார்கள்.
                 பள்ளிகூடத்தில் நடக்கும் அத்தனை கலை நிகழ்ச்சிகள் மற்றும் மந்திரதந்திர காட்சிகள்,இன்பசுற்றுலா செல்வது போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் அவர்களின் பங்கு அதிகமாக இருக்கும்.
                   பெல் அடித்த உடன் பலர் உள்ளே செல்லாமல் சாவகாசமாக வருவார்கள் அதை சிறிய பைன் மூலம் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.மாணவர்கள் அவசியமில்லாமல் விடுமுறை எடுப்பது போன்ற மாணவர்களின் நலனிலும் பள்ளிகூடநலனிலும் நல்ல ஆர்வம் கொண்டு சீரிய முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்கள். 1993 ஆம் ஆண்டு பணிநிறைவு செய்தார்கள்.1996 ம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ம் தேதி இறைவனடி சேர்ந்தார்கள் அன்னாரின் மக்பிரத்துக்காக நாம் அனைவரும் துவா செய்யஅன்புடன் வேண்டுகிறோம்.
                                          படித்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் மேலும் எனது இமெயில் முகவரி majabbarmpm@gmail.com

Mohideen Abdul Jabbar